Wednesday, November 27, 2013

கீழக்கரை அருகே கிணறு தோண்டும் போது விபத்து! புதைந்த இருவர் மீட்பு!


 படம் : பாலாஜி ,சன் ரைஸ் ஸ்டுடியோ

 கீழக்கரை அருகே ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கிணறு தோண்டியபோது, மண் சரிந்ததில், மண்ணிற்குள் புதைந்த இருவர், உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.1.40 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராமநாதபுரம் ஒப்பந்ததாரர் அருணகிரி ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர் அறை அருகே, கிணறு தோண்டும் பணியை, பாப்பாக்குடியை சேர்ந்த 5 பேர், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கினர்.

மதியம் 12.40 க்கு திடீரென மண் சரிந்தது. இதில் இளையராஜா, 29, கழுத்தளவுக்கும், கருப்பையா, 30, இடுப்பளவுக்கும் மண்ணுக்குள் புதைந்தனர். ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 மண் அள்ளும் இயந்திரங்களின் உதவியுடன், மண்ணை அள்ளினர். 

கழுத்தளவிற்கு புதைந்த இளையராஜா மூச்சு விட திணறியதால், டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தி, முதலுதவி அளித்தனர். 2 மணி நேர முயற்சிக்கு பின், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
இதில் காலில் பலத்த வலி காரணமாக இளையராஜா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருப்பையா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.