Saturday, May 5, 2012

லஞ்சம் வாங்கினால் செய்வினை !நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு ! (படம் )



கீழக்கரை நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை வகித்தார்.

துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி அவசர கூட்டம் தேவை இல்லாதது என்றும் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்காததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் ஆகியோர் மனு அளித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நகராட்சி வழிகாட்டுதல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி பதிலளித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி..

கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா - நகராட்சி பொதுநிதியில் எவ்வள்வு தொகை உள்ளது.

கமிஷனர் :- ரூ 1 கோடியே 20 லட்சம் உள்ளது.

கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் :- 3வது வார்டுக்கு கிணறு தூர் வார ரூ30 ஆயிரம் ஒதுக்கியது ஏன்? அப்பணியை என்னிடம் அளித்தால் ரூ10 ஆயிரத்தில் முடித்து தருகிறேன்.

3வது வார்டு கவுன்சிலர் :- உங்கள் வார்டு சம்பந்தப்பட்டதை பேசுங்கள்..ஏன் இதில் தலையிடுகிறீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தர்

மக்களின் பணம் வீணடிக்கப்படகூடாது அதனால் பேசுகிறேன் என்று முகைதீன் இப்ராகிம் பதிலுக்கு கூறினார் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் : - 30ஆயிரம் என்பது உத்தேச தொகைதான் அதற்கு குறைவாக செலவு செய்ய முன் வருபவர்களுக் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கவுன்சிலர் பாவா செய்யது கருணை :- நான் கோரிக்கை வைக்காமலே எனது வார்டுக்கு வடிகால் மராமத்து பணிக்கு ரூ50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனது வேறு சில பணிகளும் உடனடியாக செய்ய வேண்டியதுள்ளது எனவெ இந்த நிதியை வேறு பணிக்கு பயன்படுத்தலாமே ?

கமிஷனர் முஜிபுரஹ்மான் :- இது குறித்து ஆவண செய்யப்படும் என்றார்.

துணை தலைவர் ஹாஜா முகைதீன் :- 2வது வார்டு உள்ளிட்ட சில வார்டு புறக்கணிக்கப்படுவது ஏன்:-

கமிஷனர் :இது குறித்து கவனிக்க ப்படும்

கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா:- ரூ 2 கோடியே 50 லட்சம் ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கைமாறியதாக பொது மக்கள் தரப்பில் பேசப்படுகிறது.அப்படி யாராவது லஞ்சம் வாங்கியிருந்தால் அவர்களுக்கு செய்வினை வைப்பேன் மேலும் மக்கள் பணத்தை சுரண்டினால் அவர்கள் குடும்பம் விளங்காமல் போகும் என்றார்.

தெரு விளக்கு பணிகளுக்கு ரூ50 லட்சம் டெண்டர் ஒப்புதலுக்கு வந்த போது நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது, இப்பணியை ஒப்பந்ததாரர் மிக குறைந்த தொகைக்கு எடுத்துள்ளார்.எனவே அவர்களால் இப்பணியை சரியாக செய்ய முடியாது என்று கருதுகிறேன் எனவே மறு டெண்டருக்கு விடலாம் என்றார்.

கவுன்சிலர் ஜெயபிரகாஷ் : - குறைந்த விலையில் டெண்டரை எடுத்துள்ளவர் சரியாக பணியை செய்யவில்லையென்றால் அவர்களுக்கான பில்லுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்.எனவே மறு டெண்டர் விடவேண்டிய அவசியமில்லை .

மறு டெண்டர் விடக்கூடாது குறைந்த விலையில் டெண்டர் கேட்டவருக்கே கொடுக்க வேண்டும் என்று ஜெயபிரகாஷ்,இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா இந்த விசயத்தில் லஞ்சம் கைமாறி விட்டதாக நேரடியாக குற்றஞ்சாட்டிதோடு லஞ்சம் கைமாறவில்லையென்றால் மறுடெண்டர் விடக்கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த சேர்மன் ராவியத்துல் காதரியா உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்


தொடர்ந்து நகராட்சி தலைவருக்கும் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாதம் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் அஜ்மல் கான்,சுரேஷ் ஆகியோர் மறு டெண்டருக்கு ஆதரவாக பேசினர்.


பின்னர் இறுதி முடிவாக மறு டெண்டர் தேவையில்லை ஏற்கெனவே எடுத்துள்ள ஒப்பந்ததராருக்கே இப்பணியை வழங்கலாம் என்று நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அறிவித்தார் இதனையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கூட்டத்தில் வைக்கப்பட்ட கீழக்கரை நகர் முழுவதும் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.